பாஜகவை நம்பி யாரும் போக வேண்டாம்... ஏமாற்றி விடுவார்கள்.. எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை!
பாஜகவின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
ஹைதராபாத்: ஆசை வார்த்தைகளை கூறும் பாஜகவை நம்பி யாரும் போக வேண்டாம். யாரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதுதான் பாஜகவின் வழக்கம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களை, முன்னாள் முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபையில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றது.

பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், நாளை மாலை 4 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும்.
காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக ஆசைக்காட்டியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பாஜகவின் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவையும் காங்கிரஸ் இன்று வெளியிட்டது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசை வார்த்தைக் கூறி எம்எல்ஏக்களை வளைக்க பாஜக பார்க்கிறது. அவர்களை நம்பி யாரும் போக வேண்டாம். யாரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதுதான் பாஜகன் வழக்கம். அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications