சோனியாவுடன் சித்தராமையா சந்திப்பு- துணை முதல்வராகிறார் பரமேஸ்வர்?
பெங்களூர்: அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று சந்தித்துப் பேசினார்.
கர்நாடகத்தில் சிகாரிபுரா, பெல்லாரி புறநகர், சிக்கோடி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பா.ஜனதா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சரவையில் காலியாக உள்ள 4 இடங்களையும் நிரப்ப சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதனால் அமைச்சர் பதவியை எதிர்நோக்கி உள்ள 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு லாபியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சோனியா காந்தி அழைப்பின் பேரில் சித்தராமையா நேற்று டெல்லிக்கு சென்றார். அங்கு சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அமைச்சரவை விரிவாக்கம், பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications