ஆந்திரா தலைநகரை சிங்கப்பூர் வடிவமைக்க, ஜப்பான் கட்டுகிறது
ஹைதராபாத்: ஆந்திராவின் புதிய தலைநகரை சிங்கப்பூர் வடிவமைக்க ஜப்பான் உருவாக்க உள்ளது என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா என்று பிரிக்கப்பட்ட மாநிலத்தின் பொதுவான தற்காலிக தலைநகராக ஹைதராபாத் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை அமைக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றேன். ஆந்திராவின் புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை தாங்கள் தயார் செய்து கொடுப்பதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. மேலும் என்னுடைய ஜப்பான் சுற்றுப்பயணம் வெற்றிகரமானதாக இருந்தது. மாநில தலைநகரை உருவாக்க பல்வேறு ஜப்பானிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
கட்டுமான பணிகள் உள்ளிட்ட தலைநகரை அமைப்பதற்கான வேலைகளில் உதவ ஜப்பான் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்றார்.
குண்டூர்-விஜயவாடா பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் தலைநகரை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தலைநகர் அமைக்க 5 ஆண்டுகள் ஆகும். தலைநகரை அமைக்க ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.