பீகார் தேர்தல்: மெகா கூட்டணி, களத்தில் தொண்டர் படை.... நம்பிக்கையோடு காத்திருக்கும் பா.ஜ.க.
பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் மெகா கூட்டணி வியூகம், நம்பிக்கையோடு களமிறக்கப்பட்ட தொண்டர் படை என சில அம்சங்களால் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தொடங்கிய தேர்தலின் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளன. எஞ்சிய மூன்று கட்டத் தேர்தல்கள் முறையே, வரும் 28, அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மாநிலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் வலம் வருவதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தொண்டர் படை
வாக்குச் சேகரிக்க மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர் படையை பா.ஜ.க. இம்முறை களம் இறக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 6 லட்சம் தொண்டர் படையினரை களமிறக்கியுள்ளது பா.ஜ.க.
அதாவது ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பேர் வீதம் 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 70 ஆயிரம் பேரும் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
லாலுவின் எதிர்ப்பு வாக்கு வங்கி
பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான தலித்துகள், உயர்ஜாதிகள் வாக்குகள் தங்களுக்கு அப்படியே வந்துவிழுந்துவிடும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. அதேபோல் யாதவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் குர்மி சமூக வாக்குகளும் கணிசமாக கிடைக்கும் என நம்புகிறது பா.ஜ.க.
தலித் ப்ளஸ் உயர்ஜாதி கூட்டணி
இந்த சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. மெகா கூட்டணியை அமைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி (இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா) கட்சி, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை மூலம் உயர் ஜாதி மற்றும் தலித் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்பது பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு.
மோடி எபெக்ட்
லோக்சபா தேர்தலில் மோடியின் பிரசாரம் மக்கள் மத்தியில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கை பெருமளவு உயர்த்தியது. அதுவே மத்தியில் ஆட்சி மாற்றத்தையும் உண்டாக்கியது. பின்னர் ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் மோடி எபெக்ட் கைகொடுத்தது. அந்த தாக்கம் பீகார் தேர்தலிலும் இருக்கும் என்பதும் பாஜகவின் கணக்கு.
பெண்கள் வாக்கு
நடந்து முடிந்த 2 கட்டத் தேர்தல்களிலும் பெரும் திருப்பு முனையாக அமைந்தது பெண்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தது. பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை பெண்கள் முழுமையாக நம்புவதாலேயே இந்த படையெடுப்பு..இது அப்படியே பா.ஜ.க.வுக்கான வாக்குகளாக மாறும் எனவும் நம்புகின்றனர் பா.ஜ.க.வினர்...
பாரதிய ஜனதாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் எலியும் பூனையுமாக இருந்த நிதிஷ்குமார், லாலு ஒன்றாக கை கோர்த்துள்ளனர். இவர்களுக்கு துணையாக காங்கிரசும் அந்த கூட்டணியில் சேர்ந்துள்ளது. ஆட்சியைப் பிடிப்பது பாஜக கூட்டணியா? ஆளும் நிதிஷ் கூட்டணியா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.