லீனாவுக்கு சப்போர்ட்-மொய்த்ரா எம்.பி. மீது 6 மாநிலங்களில் வழக்கு- திரிணாமுல் காங்.ல் கடும் எதிர்ப்பு
கொல்கத்தா: காளி தெய்வம் வேடமணிந்தவர் புகைபிடிக்கும் போஸ்டரை உருவாக்கி பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார் ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை. அவரை ஆதரித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது 6 மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாம் இயக்கிய ஆவணப் படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார். காளி தெய்வம் வேடம் அணிந்தவர், புகைத்து கொண்டும் அவர் அருகே ஓரின சேர்க்கையாளர்களின் வானவில் கொடி பறப்பதாகவும் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. டெல்லி, உ.பி. போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே லீனாவின் போஸ்டரை நியாயப்படுத்தும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில், சிக்கிம்-பூடானில் கடவுளுக்கு மதுவகைகள் படையலாக வைக்கப்படுகின்றன. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் கடவுளுக்கு மது படைப்பது என்பது மத அவநம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
என்னைப் பொறுத்தவரை காளி என்கிற தெய்வம் இறைச்சி சாப்பிடக் கூடிய, மது அருந்தக் கூடியது. மேற்கு வங்கத்தின் தாரபீத் கோவிலுக்குப் போனால் காளி கோவிலை சுற்றி துறவிகள் புகைபிடித்து கொண்டுதான் இருபார்கள். ஒரு காளி பக்தையாக அந்த தெய்வத்தை இறைச்சி சாப்பிடக் கூடிய, மது அருந்தக் கூடியவராக கற்பிதம் செய்ய எனக்கு உரிமை உண்டு என கூறியிருந்தார்.
மஹூவாவின் இந்த கருத்து மிகப் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இது மஹூவாவின் சொந்த கருத்து என தெரிவித்துள்ளது. மேலும் மஹூவாவின் கருத்துகளை திரிணாமுல் காங்கிரஸ் கண்டிக்கிறது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
Recommended Video
மஹூவாவின் இந்த கருத்துகளுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என்கிறது பாஜக. இது தொடர்பாக மஹூவா மீது 6 மாநிலங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் மஹூவா தமது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications