விமானத்திற்கு இணையான வசதிகளுடன் அறிமுகமாகிறது ஸ்மார்ட் ரயில் பெட்டிகள்
டெல்லி: ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிப்பை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு வரும், ரயில்வே பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதோடு, வீட்டில் இருப்பதை போன்ற சொகுசான உணர்வை தரும்வகையில் இந்த ரயில் பெட்டிகள் இருக்க உள்ளது.
'ஸ்மார்ட் கோச்' என்று அழைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகளில், ஜிபிஎஸ் மூலமாக ரயில் நிலையத்தை கண்டறிந்து, பயணிகளை தூக்கத்தில் இருந்து எழுப்பும் அலாரம், எல்இடி மூலமான முன்பதிவு சார்ட், இலவச வைஃபை போன்ற வசதிகள் இருக்கும்.
விமானங்களிலுள்ளதை போல, பயணிகளுக்கான தகவல் கட்டமைப்பு இருக்கும். பகல் நேரத்தில் ஒலி பெருக்கி வழியாக, அறிவிப்புகள் வெளியாகும். ரயில் நடத்துனரிடம் உதவி கேட்க வாய்ஸ் அடிப்படையிலான தொழில்நுட்பமும் இருக்கும்.
மேலும், ரயில் பெட்டிக்குள்ளேயே குடிநீர், காபி, டீ மற்றும் குளிர்பானங்களுக்கான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்குமாம். மைக்ரோபுராசசர் வசதி கொண்ட ஏசி கருவிகள், தானியங்கி கதவுகள், ஒவ்வொரு சீட்டுக்கும், செல்போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங் செய்யும் வசதி போன்றவையும் இப்பெட்டியில் இருக்கும். புகை வெளியேறினால், கண்டுபிடித்து சத்தம்போடும் அலாரமும் இதில் இருக்கும்.
இதுகுறித்த அறிவிப்பு இம்மாத கடைசியில் வெளியாக உள்ள பட்ஜெட் உரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பயணிகள் ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.