பெற்ற தாயை, நாயுடன் தங்க வைத்து சோறு போட்ட மகன் - கர்நாடகத்தில் பரிதாபம்!
ஹாசன்: கர்நாடகாவில் பெற்ற தாயை, நாயுடன் சேர்த்து வைத்த பராமரித்த மகனால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சக்லேஷ்புரா தாலுகா, ஹலசுலிகே கிராமத்தை சேர்ந்தவர் தேவம்மா. இவர் கடந்த ஓராண்டு காலமாக வீட்டின் முன்புறம் நாய் இருக்கும் இடத்தில் அதனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் தன்னார்வு தொண்டு அமைப்புக்கு தெரிய வந்தது.
அவர்கள் நேற்று அங்கு சென்றபோது, மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் நாய் இருக்கும் இடத்தில் மூதாட்டி கடும் குளிரில் நடுங்கி கொண்டிருந்ததை பார்த்தனர். நாயுடன் சேர்த்து அடைத்து வைக்கப்பட்ட மூதாட்டியை வெளியில் எடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அவரது மகனிடம் கேட்டபோது, வயதாகிவிட்டதால் வீட்டில் அவருக்கு ஒதுக்கியுள்ள அறையில் தங்காமல் வெளியில் வருகிறார். மேலும் நிதானம் தவறி வீட்டிற்குள் மலம், சிறுநீர் கழிக்கிறார்.
இதனால் வீட்டில் துர் நாற்றம் ஏற்படுகிறது. எனது பிள்ளைகள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அதனால் வெளியில் நாய் உள்ள இடத்தில் விட்டுள்ளேன் என்றார். மிகவும் வசதியாக வாழும் மூதாட்டியின் மகன் பேசுவதை கேட்ட தன்னார்வு தொண்டு அமைப்பினர் இவருக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது என்று அமைதியாகி விட்டனர்.
இது குறித்து மூதாட்டி கூறியதாக தன்னார்வ தொண்டு அமைப்பினர், "மூதாட்டியின் கணவர் மூலம் கிடைத்த ரூபாய் 1 லட்சத்தை அவரது மகன் பறித்துக்கொண்டு மூதாட்டியை வீட்டுக்குவெளியே நாயுடன் தங்க வைத்துள்ளார். வயதான காலத்தில் எங்கும் செல்ல முடியாமல், வேறு வழியின்றி அவரும் நாயுடன் வசித்து வந்தார். நாய்க்கு தினமும் மூன்று வேளை சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு பழைய சாப்பாட்டை ஓரு வேளை தான் கொடுக்கிறார்கள்" என்று அவர் வேதனைப்பட்டதாக தெரிவித்தனர்.