3 வருடங்களுக்குப் பின் சோனியா நடத்திய “இப்தார் விருந்து”– லாலு உள்பட பல தலைவர்கள் பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் மூன்று வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இப்தார் விருந்தினை அளித்தார்.
நேற்று நடைபெற்ற இப்தார் விருந்தில் அவருடன் ராஸ்ட்ரிய ஜனதாதள் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அவர் ஒரு புறம் அமர, மறுபக்கம் ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் அமர்ந்திருந்தார். அதே வரிசையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தாரிக் அன்வரும் அமர்ந்திருந்தார்.
மன்மோகன்- ராகுல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் காந்தியும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
ஷர்மிளா தாகூர்
ராகுல் காந்தி கட்சியினருடன் அமர்ந்திருக்கையில், மன்மோகன் சிங் தனி இருக்கையில் முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி மற்றும் நடிகை ஷர்மிளா தாகூருடன் அமர்ந்திருந்தார்.
2வது பெரிய விருந்து
கடந்த வாரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்தார் விருந்து அளித்தார். அதற்கு அடுத்து டெல்லியில் நடந்த பெரிய அளவிலான இப்தார் நிகழ்ச்சியாக சோனியா அளித்த விருந்து அமைந்தது.
3 வருடங்களாக தரவில்லை
கடந்த மூன்று ஆண்டுகளாக சோனியா காந்தி இப்தார் கொடுக்காமல் இருந்தார். பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவையே இதற்குக் காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ள நிலையில் மீண்டும் இப்தார் கொடுத்துள்ளார் சோனியா என்பது குறிப்பிடத்தக்கது.
தூதர்கள்
அசோகா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கியஸ்தர்கள்
இந்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட பிற முக்கியஸ்தர்கள்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷி, அம்பிகா சோனி, பிரேம் சந்த் குப்தா, அகமது பட்டேல், அஜய் மக்கான், மோதிலால் வோரா, திக் விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா, ஷாகில் அகமது, ராஜீவ் சுக்லா, குமாரி செல்ஜியா, மோக்ஷினா கித்வய், கரண் சிங், ஹரோன் யூசுப், அரவிந்தர் சிங் லவ்லி, ராஜ் பாபர், முகமது அசாரூதீன், மணி சங்கர் ஐயர்.
குலாம் நபி ஆசாத்தும்
ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத்தும் இதில் கலந்து கொண்டார்.