செருப்பால் அடித்துக் கொண்டு தோப்புக்கரணம்... அரசியல் பிரமுகருக்கு அளிக்கப்பட்ட வினோத தண்டனை
மதுரா: செய்த தவறுக்கு தண்டனையாக தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும் என அரசியல் பிரமுகர் ஒருவருக்கு வழங்கப் பட்ட தண்டனைக் காட்சிகள் ரகசியமாக எடுக்கப் பட்ட வீடியோக் காட்சிகள் மூலம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர், மதுரா மாநகராட்சி உறுப்பினரான மகேந்திர சவுஹான் என்பவரை, அவர் செய்த செயலுக்கு அவரை மன்னிப்பு கேட்க வைக்கும் விதமாக, தன்னைத் தான் அவர் செருப்பால் அடித்துகொள்ளும்படியும், தோப்புக்கரணம் போடும்படியும் செய்துள்ளார்.
காவல் நிலைய வளாகத்தினுள் நடைபெற்ற இந்த சம்பவத்தை அங்கிருந்த காவல் துறையினர் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால், இக்காட்சிகளை யாரோ மர்ம நபர் ரகசியமாக தனது செல்போனில் படமாக்கியிருக்கிறார்.
தற்போது அக்காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதில், காவல் துறையினரின் முன்னிலையில், மகேந்திர சவுஹான் காலணியால் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள இக்காட்சிகள் குறித்து விசாரணை நடத்தி தனக்கு 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குலாப் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.