கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி, தம்பியை கடத்திய முலாயம் கட்சி தலைவரின் மகன்
மொராதாபாத்: உத்தர பிரதேசத்தில் 19 வயது கல்லூரி மாணவி மீது வீடு புகுந்து ஆசிட் வீசிய சமாஜ்வாடி கட்சி தலைவரின் மகன் அந்த பெண்ணின் தம்பியை கடத்திச் சென்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள முல்லா பட்டிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பாயல்(19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அனில் பிஷ்னோயின் மகனும் வழக்கறிஞருமான மணி பிஷ்னோய் பாயலின் வீட்டுக்கு சென்று அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அதற்கு பாயல் எதிர்க்கவே மணி அவர் மீது ஆசிட் வீசிவிட்டு சென்றுவிட்டார். இது குறித்து பாயல் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மணி பாயலின் 10 வயது தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கக் கூடாது என்று மிரட்டினார். இதனால் நீதிமன்றத்தில் ஆஜரான பாயல் தன் மீது தவறுதலாக ஆசிட் பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
அதன் பிறகு மணி பாயலின் தம்பியை வீட்டுக்கு அனுப்பி உள்ளார். தம்பி வீடு வந்து சேர்ந்ததும் பாயல் நடந்த சம்பவம் பற்றிய உண்மையை போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் மணி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இது குறித்து பாயல் கூறுகையில்,
பணத்தை பெற்றுக் கொண்டு மணியுடன் சமரசம் ஆகுமாறு போலீசார் தெரிவித்தனர். நான் தான் மணியை மிரட்டியதாக போலீசார் என்னை குறை கூறுகிறார்கள். இதனால் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications