வெறுப்பை பரப்பலாம்.. உண்மையை பேசினால் குற்றமா? - மத்திய அரசை வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி
கொல்கத்தா: வெறுப்பையும் வன்முறையையும் பரப்புவோர் கைது செய்யப்படாத நிலையில் உண்மையை பேசியதற்காக பத்திகையாளர் முஹம்மது ஜுபைரும், சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதால்பத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்கு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. ஆனால், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் ஜுபைர்
நுபுர் ஷர்மாவின் இந்த சர்ச்சை கருத்தை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் என்று கூறப்படுகிறது. நுபுர் ஷர்மாவின் பேச்சு தொடர்பாக தனது ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் முதன்முதலில் செய்தி வெளியிட்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்தன.

வழக்குப்பதிவு
தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் பகிரப்படும் பொய்யான செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளியிட்டு வந்த ஜுபைர் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். சாமியார்கள் மாநாட்டில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதற்காக கடும் விமர்சனங்களை முன்வைத்த ஜுபைர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவிட்டதாக கூறி பதிவான வழக்கில் நேற்றிரவு ஜுபைர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

மம்தா பானர்ஜி கண்டனம்
இந்த நிலையில் முஹம்மது ஜுபைர் கைதுக்கும், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோர்களுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதால்வத் கைதுக்கும் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், "முஹம்மது ஜுபைரையும், தீஸ்தா செதால்வத்தையும் ஏன் கைது செய்தீர்கள்? அவர்கள் என்ன தவறு செய்தனர். உண்மையை அம்பலப்படுத்தியது தவறா? அரசுக்கு எதிராக பேசுபவர்களை அதன் நிறுவனங்கள் துன்புறுத்துகின்றனர். வெறுப்பையும் வன்முறையையும் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications