ஈயம் பூசிய, பூசாத மாதிரி.. வக்பு மசோதா மீது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் நிலை என்ன?
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான தெலுங்குதேசம் கட்சியின் நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. மத்திய கூட்டணி அரசை தாங்கிப் பிடிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவில் இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பை எதிர்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் 'நூதனமான' நிலைப்பாடுகளை தெலுங்குதேசம் கட்சி எடுத்திருக்கிறது.
இஸ்லாமியர்களின் வக்பு சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்திருப்பதுதான் வக்பு சட்ட திருத்த மசோதா. இம்மசோதாவை தொடக்கம் முதலே அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. லோக்சபாவில் நேற்றும் 232 எம்.பிக்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை தாங்கிப் பிடிக்கக் கூடிய இரு கட்சிகள் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். இந்த இரு கட்சிகளுமே தங்களது சொந்த மாநிலங்களான ஆந்திரா, பீகாரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை கணிசமாக பெற்றுள்ளவை. இதனால் வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் தெலுங்குதேசம், ஜேடியூவின் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. ஜேடியூவைப் பொறுத்தவரையில் வக்பு மசோதாவை ஆதரிப்போம் என உடனடியாக அறிவித்தது.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு, வக்பு மசோதா மீதான நிலைப்பாடு குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினார்; சட்ட வல்லுநர்களுடன் விவாதம் நடத்தினார்.
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று வக்பு மசோதா மீது பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி கிருஷ்ண பிரசாத், மாநிலங்களில் உள்ள வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினராக்குவது தொடர்பான முடிவை அந்தந்த மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும் என்கிற திருத்தத்தை முன்வைத்தார். அத்துடன் வக்பு வாரியங்களில் பெண்கள், இளைஞர்கள் இடம் பெறுவதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வக்பு வாரிய சொத்துகளை வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் இஸ்லாமியர்கள் பயனடையும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தெலுங்குதேசம் கட்சியானது, வக்பு மசோதாவை ஆதரித்தாலும், இஸ்லாமியர்களை கடுமையாக பாதிக்கக் கூடிய, இஸ்லாமியர் அல்லாதவரும் வக்பு வாரிய உறுப்பினராகலாம் என்ற சரத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் திருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளது. வக்பு மசோதாவை தெலுங்குதேசம் முழுமையாக ஆதரித்துவிட்டது என்ற எதிர்ப்பு விமர்சனத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் நுட்பமான நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications