கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை 'காங்கிரஸுக்கு' கச்சிதமாக பொருந்துதே...
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின் 6 மாதங்களில் நடைபெற்ற 4 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருவதால் அக்கட்சியின் முகமான ராகுல் காந்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களைத்தான் பெற்றது. இதனால் லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஹரியானாவில் காங்கிரஸ் தனித்தே ஆட்சியில் இருந்தது.
ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வியைத்தான் சந்தித்தது காங்கிரஸ். 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தலில் வெறும் 41 இடங்களைத்தான் காங்கிரஸ் பெற்றது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபை தேர்தலிலோ 15 இடங்களில்தான் காங்கிரசால் வெல்ல முடிந்தது. தற்போது நடைபெற்று முடிவடைந்துள்ள ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கூட ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்றிருந்தது.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் 12, 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெறு 5 இடங்களைத்தான் காங்கிரசால் வெல்ல முடிந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் நடைபெற்ற இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பாஜக வெற்றிக் கொடிதான் நாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாரதிய ஜனதா. ஜம்மு காஷ்மீரில் 2வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
லோக்சபா தேர்தலிலும் இந்த சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸின் முகமாக பிரசாரம் செய்தது அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திதான். லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த போதே ராகுலுக்கு எதிராக காங்கிரஸில் கலகக் குரல் வெடித்தது.
இப்போது மேலும் 2 மாநிலங்களில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளதால் ராகுல் காந்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இனியாவது தமது தலைமையையும் வியூகத்தையும் மாற்றிக் கொள்ளாது போனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடும் காங்கிரஸ் நிலைமை என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.