ஆசிரியர் தினம்: சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்!
டெல்லி: ஆசிரியர் தினத்தன்று சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தை இனிமேல் குரு உத்சவ் என்று அழைக்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆசிரியர் தினத்தன்று அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடி உரையை கேட்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதையடுத்து, மோடியின் உரையாடலை அனைத்து சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கேட்க வேண்டும் எனவும், ஆசிரியர் தினத்தன்று எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மோடி உரையாடலை கேட்பதற்காக அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் ஒளிப்பரப்பு சாதனங்கள், டி.டி.எச். சாட்டிலைட், மின்சாரம், மின்வெட்டு ஏற்பட்டால் அதை தவிர்க்க ஜெனரேட்டர் என அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், திரையிடுவதற்கான சாதனங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் கட்டாயம் ரேடியோ மூலம் உரையை கேட்க, பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் சி.பி.எஸ்.சி. இயக்குனரகத்திற்கு, அனைத்து பள்ளி நிர்வாகமும் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு, இந்திய மாணவர் சங்கத்தின், தமிழ்நாடு மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications