கடவுளின் பெயரை வர்த்தகப் பொருட்களில் பயன்படுத்த தடை விதிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி : கடவுள்களின் பெயரையும், படத்தையும் வர்த்தக நோக்கில் பயன்படுத்த தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான பொதுநலன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததது. அதில் லாப நோக்கிற்காக தொழிலதிபர்கள், தங்களது உற்பத்தி பொருட்களில் ஆண் , பெண் கடவுள்களின் படத்தை பயன்படுத்துகின்றனர். இது கடவுள்களை அவமரியாதை செய்வதாகும் இதனை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இறுதியில் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது...
உற்பத்தி பொருட்களில் கடவுள்களின் படம் பயன்படுத்துவது அவர்களின் நம்பிக்கை அதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் 33 ஆயிரம் ஆண், பெண் கடவுள்கள் பெண் தெய்வங்கள், தேவர்கள் உள்ளதாக கூறுகின்றனர். அதனை வணங்குவது அவரவர் உரிமை. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்யும் ஒருவர் அதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்
இது மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம். ஒரு வியாபாரி லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை வைத்தால் அதை எப்படி தடுக்க முடியும்?
அது அவரது மகள் பெயராகக் கூட இருக்கலாம். அதேபோல ஒருவரது கடையின் பெயர் பலகையிலும், அவரது தயாரிப்பு பொருளின் அட்டை மீதும் கடவுள் உருவத்தை பதிப்பதை தடுக்க முடியாது.
எனவே கடவுள் பெயரையும், படத்தையும் வியாபாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது
என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.