ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது.. மத்திய அரசு அறிவிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு எதிரான பொது நல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து உள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக விவேக் நாராயண், சங்கம்லால் பாண்டே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று மதியம் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது என கூறி, ரூபாய் நோட்டு குறித்த அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து கோர்ட்டில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மத்திய அரசும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும்போது, தங்களது வாதத்தை கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.