உச்சநீதிமன்ற நிர்வாகம் சில மாதங்களாகவே சரியில்லை.. நீதிபதி செல்லமேஸ்வர் பரபரப்பு பேட்டி
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் உள்ள நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி செல்லமேஸ்வர் தாங்கள் பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்றும் அவர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும் அவர் கூறினார். கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை என்றும் நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதித்துறைக்கு மூத்த நீதிபதிகளான நாங்களே பொறுப்பு என்றும் நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார். தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து சக நீதிபதிகள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.