நிர்பயா வழக்கை விசாரித்தபோது.. மயங்கி சாய்ந்த நீதிபதி பானுமதி.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு
டெல்லி: நிர்பயா வழக்கு தொடர்பான விசாரணையின்போது உச்சநீதிமன்ற மூத்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி, மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடி சிகிச்சையை தொடர்ந்து அவர் உடல்நலம் தேறியது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக, இன்று உச்சநீதிமன்றத்தில், ஆர்.பானுமதி உள்ளிட்டோர் அடங்கிய 3 நீதிபதிகள் பெஞ்ச்சில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை நடைபெற்றபோது, திடீரென நீதிபதி பானுமதிக்கு கண்கள் மங்கின, மயக்கமான நிலைக்கு சென்றார். தனது இருக்கையிலேயே சற்று, மயக்கமுற்ற நிலையில் அமர் சில வினாடிகள் கண்ணை மூடியபடி அமர்ந்திருந்தார். இதையடுத்து கோர்ட்டில் பரபரப்பான சூழல் நிலவியது.
மருத்துவ ஊழியர்கள் நீதிமன்ற அறைக்கு வரவழைக்கப்பட்டனர். அதற்குள்ளாகவே, பானுமதி, இயல்பு நிலைக்கு திரும்பினார். இருப்பினும், அவர் சோர்வுற்று இருந்ததால், வீல்சேரில் வைத்து, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக, நிர்பயா வழக்கில் திங்கள்கிழமை வரை ஏன் காத்திருக்க கூடாது என நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். வேறு எந்த நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நிலுவையில் இல்லை. எனவே திங்கள்கிழமை வரை காத்திருக்கலாம், கீழமை நீதிமன்றம் என்ன கூறுகிறது என்பதை பார்த்து அடுத்தகட்ட உத்தரவை பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
ஆனால் முழுமையான உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக நீதிபதி பானுமதி மயக்கமடைந்ததால், உத்தரவு தொடர்பாக பின்னர் அறிவிக்கிறோம் என கூறிய பிற இரு நீதிபதிகளும், வழக்கு விசாரணையை, அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். நீதிபதி மயக்கமடைந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.