மோடியுடனான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: குஜராத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் புறக்கணித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. அக்கட்சியும் நம்பிக்கையோடு அமைச்சரவை குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் குஜராத்தின் காந்திநகரில் மோடியுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வகையறாக்களை எப்படி ஓரம்கட்டுவது என்பது தொடர்பாகவும் அக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஆனால் இந்த கூட்டத்தை கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் புறக்கணித்திருக்கிறார். டெல்லியில் முகாமிட்டிருந்த அவர் போபாலுக்கு புறப்பட்டுவிட்டார். முன்னதாக தம்மை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியிடம், தமக்கு புதிய அரசில் மரியாதைக்குரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அமைச்சரவை உள்ளிட்ட எந்த ஒரு முடிவுமே பாஜகவின் நாடாளுமன்ற குழு கூடிதான் கூட்டாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கட்காரியிடம் சுஷ்மா கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.