பசு மாட்டின் வாயில் சிக்கிய மர்மப் பொருள் வெடித்ததில் தாடை எலும்பு முறிவு!
தேவிகுளம்: கேரள மாநிலம் மூணாறு அருகே தேவிகுளத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாடு மர்ம பொருள் ஒன்றைக் கடித்தபோது அது வெடித்து சிதறியதில் அதன் தாடை எலும்பு முறிந்து தசை மற்றும் தோல் தொங்கியதால் காப்பாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூணாறு அருகே தேவிகுளத்தில் சமூக சுகாதார நிலையம் அருகில் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி சண்முகவேல் வசித்து வருகிறார்.
இவரது இரண்டு வயது பசு அப்பகுதியில் உள்ள காட்டிற்கு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றபோது மாலையில் வெடி சப்தம் பலமாக கேட்டது.
கீழ்தாடை முறிவு:
பசு வாய் பகுதியில் கீழ் தாடை எலும்பு முறிந்து, தசை மற்றும் தோல் போன்றவை கிழிந்து தொங்கிய நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.
வெடியால் விபரீதம்:
இதனைக் கண்ட பொது மக்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்ட வெடியை கடித்ததால் மாட்டின் வாய்ப் பகுதி சிதைந்திருக்கக் கூடும் எனக் கருதினர்.
தாடை எலும்புகள் முறிவு:
தசை தொங்கிய நிலையில் காணப்பட்டதால் தெரு நாய்களும் மாட்டை துரத்தின. மூணாறு கால்நடை டாக்டர் செல்வம் மாட்டை ஆய்வு செய்து, ''மாட்டின் தாடை எலும்புகள் முறிந்து தொங்குகிறது. இதற்கு சிகிச்சை அளிக்க வசதியில்லை'' என்றார். இதனால் உண்ண இயலாமல் மாடு இறக்க நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் வேட்டை:
தேவி குளத்தை மையமாகக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 15 இல் சைலன்ட்வாலி மெத்தாப்பு பகுதியில் 8 பேர் கும்பல் காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடினர். இந்த வழக்கில் தொடர்புடைய தேவிகுளம் காவல் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றிய இருவர், கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர்.
வேட்டையாக இருக்க சந்தேகம்:
காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய முக்கிய குற்றவாளியை இரண்டு வாரங்களுக்கு முன்பு வனத்துறையினர் கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர். ஆகவே இதுவும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலின் செயலாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications