மீன்பிடி இயந்திரப் படகுகள் பெரும்பாலும் டி.ஆர். பாலு, சசிகலாவுக்கு சொந்தமானது- சு.சுவாமி
டெல்லி: தமிழக மீனவர்களின் இயந்திரப் படகுகளில் பெரும்பாலும் திமுகவின் டி.ஆர். பாலு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமானது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர் படகுகள் பணக்காரர்களுக்கு சொந்தமானது. அதனால் அதனை விடுவிக்க வேண்டாம் என்று ராஜபக்சேவிடம் சொன்னேன். அதைத்தான் அவர்கள் செய்கிறார் என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து கடிதமும் அனுப்பியிருந்தார்.
பிரதமருக்கு சுவாமி விளக்க கடிதம்
இதன் பின்னர் நான் ராஜபக்சேவிடம் அப்படி சொல்லவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அத்துடன் பிரதமர் மோடிக்கு ஒரு விளக்க கடிதமும் அனுப்பியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு மீனவர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று ஏழை மீனவர்கள் விடுதலைக்காக உதவினேன். ஆனால் மீன்பிடி இயந்திரப் படகுகள் பெரும்பாலும் திமுகவின் டி.ஆர். பாலு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமானது.
இவர்கள் பணக்காரர்கள் என்பதால் என்னிடம் இவர்கள் மனு கொடுக்கப்போவதில்லை. நான் மீனவர்களை விடுதலை செய்தது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முந்தைய ஆட்சியிலும் சரி தற்போதும் சரி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி கடிதம் எழுதியதைத் தவிர வேறு ஒன்றும் ஜெயலலிதா செய்யவில்லை. இது வரும் சட்டசபை தேர்தலில் அவருக்கு எதிர்ப்பாக அமையும் என்று கருதுகிறார்.
கடந்த காலங்களில் என்னுடைய கடினமான முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, நாடாளுமன்றத்தில் தேவர் சிலை அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவை நடந்தன. ஆனால் தன்னால்தான் எல்லாமே நடந்ததாக உரிமை கொண்டாடினார் ஜெயலலிதா. ராம்சேதுவைக் கூட தானே காப்பாற்றியதாகவும் கூறிக் கொண்டார்.
இந்த பிரச்சனைகளில் கடினமாக நான் உழைத்த போதும் இதை எல்லாம் நான் பெரிதுபடுத்தவில்லை. வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தைப் போல பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால் காமராஜர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.