வெளியுறவுத்துறைக்கு தெரியாமல் ரகசிய மீட்.. ஷார்ஜா மன்னரை அழைத்து சென்றேன் - பகீர் கிளப்பும் ஸ்வப்னா!
கொச்சி : ஷார்ஜா மன்னர் திருவனந்தபுரம் வந்தபோது வெளியுறவுத்துறைக்கு தெரியாமல் நான்தான் பினராயி விஜயனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்வப்னா சுரேஷ்.
கேரளாவில் பெரும் புயலையே கிளப்பிய திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடத்தலில் முக்கிய பங்கு உள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் அரசு இல்லத்திற்கு தான் பலமுறை சென்றுள்ளதாகவும், அதுவும் ரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாகச் சென்றதாகவும் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பலிகடா.. உண்மையான குற்றவாளிகளை விசாரிக்கவே இல்ல.. பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு அனுப்பப்பட்ட ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவை உலுக்கிய விவகாரம்
கேரளாவில் பெரும் புயலையே கிளப்பிய இந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
அமலாக்கத்துறை விசாரணை
தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்திலும் ஸ்வப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் முதல் ஸ்வப்னா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி வருகிறார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகசிய சந்திப்பு
இந்நிலையில், கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வப்னா சுரேஷ், "திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் அரசு இல்லத்திற்கு அமீரக துணைத் தூதருடனும், நான் தனியாகவும் பலமுறை சென்றுள்ளேன். இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் அனுமதி கிடையாது. அவை ரகசிய பேச்சுவார்த்தை என்பதால் இது தொடர்பாக வெளியுறவுத் துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
வீடியோ ஆதாரம்
தலைமைச் செயலகத்திற்கும் சென்று நான் பலமுறை பினராயி விஜயனை சந்தித்துப் பேசியுள்ளேன். இது தொடர்பான வீடியோக்கள் என்னிடம் உள்ளன. ஷார்ஜா மன்னர் திருவனந்தபுரம் வந்தபோதும் வெளியுறவுத் துறைக்கு தெரியாமல் நான்தான் பினராயி விஜயனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் கமலா ஆகியோர் ஷார்ஜா மன்னருக்கு பரிசு வழங்கிய வீடியோவும் என்னிடம் உள்ளது. இந்த விவரங்களை நான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ் கடிதம்
இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. அந்தக் கடிதத்தில், கேரள முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் நேரடி தொடர்பு உள்ளது. மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நான் செயல்பட்டேன். உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். உங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.