ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பது எப்போது? ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு இடம்?.. புதிய தகவல்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் அங்கு பாதுகாப்புக்கு இருக்கின்றன.

அமெரிக்க படைகள் வெளியேறும்
காபூல் விமான நிலையத்தை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா, அங்கு இருந்து வேறு நாடுகளை சேர்ந்தவர்களையும், ஆப்கான் அகதிகளையும் வெளியேற்றி வருகின்றன. ஆகஸ்டு 31-ம் தேதி ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 31-ம் தேதி அமெரிக்க படைகள் முழுமையாக செல்ல வேண்டும், இதற்கு மேல் டைம் கொடுக்க முடியாது என்று தாலிபான்களும் கூறி விட்டனர்.

புதிய அமைச்சரவையை
அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர்.புதிய அமைச்சரவை அமைப்பதற்கான சரியான நேரம் தெளிவாக இல்லை. இந்த அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று தாலிபான்கள் இயக்கத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் ஏதேனும் பெண்கள் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது தலைமை முடிவு செய்யும் விஷயமாக இருக்கும் என்றும், அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது எஎன்றும் கூறினார்.

அதிகாரிகள் நியமனம்
பொது சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்கள் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை நடத்த அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். புதிய அரசு அமைந்தவுடன் ஆப்கானில் பொருளாதாரப் பிரச்சனைகள் தளர்த்தப்படும் என்று கூறிய அவர் வெளிநாட்டு நாணயத்திற்கு எதிரான ஆப்கானின் வீழ்ச்சி தற்காலிகமானது. திடீரென மாறிய சூழ்நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அமைப்பு செயல்படத் தொடங்கியவுடன் அது இயல்பு நிலைக்கு வரும் என்றும் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணுமாறு வேண்டுகோள் விடுத்த ஜபிஹுல்லா முஜாஹித் இது தொடர்பாக மிக விரைவில் அந்த நாடுகள் முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் காபூலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகும் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
Recommended Video

வங்கிகளை திறக்க உத்தரவு
சனிக்கிழமையன்று தாலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில் 200 டாலர்கள் அல்லது 20,000 ஆப்கான் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாராந்திர வரம்புடன் வங்கிகளை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்துள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமாகவே காணப்படுகிறது. காபூலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications