உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழிகள்.. தமிழுக்கும் இடமுண்டாம்.. கூறுகிறது கோர்ட் வட்டாரம்
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில மொழிகளிலும் வர உள்ளது. இதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியானது. தமிழிலும் இந்த தீர்ப்புகளை வெளியிடவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில் தீர்ப்பு மொழி பெயர்ப்புகள் தமிழிலும் வருகிறது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்து அந்தந்த மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பது தற்போதையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் திட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடும்போது மனுதாரர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் தங்களது வழக்கின் நிலை, தீர்ப்பு குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே ஆங்கிலத்தில் இருக்கும் தீர்ப்புகளை இந்தி மொழியில் மட்டுமல்லாது மாநில மொழிகளில் வெளியிடவேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியிருந்தார். இதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் வரவேற்றிருந்தார். இது மிக சிறப்பான திட்டம் என்று புகழ்ந்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் முறை தற்போதும் இருந்து வருகிறது.
இதை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் இதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில தீர்ப்புகளை மாநில மொழிகளில் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இப்படி மொழியாக்கம் செய்து வெளியிடும் திட்டத்தில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்ற தகவல் பரவியது. இதனால் தமிழை இந்த திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் தமிழ் மொழி இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து நீதிமன்ற பணியாளர்களிடம் விசாரித்தபோது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து வெளியிடுவதில் தமிழ் மொழிக்கும் இடமுண்டு என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர். ஆக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வரும் தீர்ப்புகள் தமிழிலும் வரும் என்பதுதான் உண்மை என்று கூறினார்கள் நீதிமன்ற பணியாளர்கள்.
வரும் வராது என்பதல்ல இப்போதைய சர்ச்சை, தீர்ப்பு வெளியாகும் மொழிகள் என அறிவிக்கப்பட்ட பட்டியலில் தமிழைக் காணோம் என்பதுதான் பிரச்சினை. எனவே இதற்கு மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் முறைப்படி விளக்கம் அளித்து முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.