மகா கும்பமேளாவில் புனித நீராடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி! பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா என உருக்கம்!
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் சென்று புனித நீராடியுள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய நீராடியதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ரவி, "பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.

இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சி அடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இப்போது வரை சுமார் 60 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா நிகழ்வுக்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை உ.பி அரசு அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications