இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் குமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது- பொன்.ராதா
திருவனந்தபுரம்: தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் இந்து மகா சம்மேளனம் சார்பில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சங்குமுகம் கடலில் நடந்தது. முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இந்துக்களின் ஒற்றுமைக்கு அஸ்திவாரம் இட்டது கேரளா தான். மொழி அடிப்படையில், கேரளாவிடம் இருந்து பிரித்து கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்து சமூகம் ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்காது.
கேரளாவின் வளர்ச்சிக்காக இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்ததை செய்வேன்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
கண்டனம்
அவரது இந்த பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ராச்குமார் பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராச்குமார் பழனிச்சாமி, தமிழகத்தின் இறையாண்மைக்கு எதிராக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அவர் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவார? அல்லது கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கபப்ட்டவரா? பொன். ராதாகிருஷ்ணன் இப்பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.