ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து... சந்திரபாபு நாயுடு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று 2014ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு உறுதியளித்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்த சந்திரபாபு நாயுடு எப்படியாவது சிறப்பு அந்தஸ்து பெற்றுவிட முயன்றார்.
ஆனால் பாஜக அரசும் இதற்கு அசைந்து கொடுக்காததால் அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. முதலில் தனது கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 பேரை ராஜினாமா செய்ய வைத்த சந்திரபாபு நாயுடு, அதற்கும் அரசு இசைந்து கொடுக்காததால் கூட்டணியை முறித்தார்.
இதனையடுத்து தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் தெலுங்கு தேசம் கட்சி எம்பிகள் ராஜினாமா பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.