தெலுங்கானா மேடக்: மாட்டிறைச்சி கடைகள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதலால் சமூக மோதல்- இன்று பந்த்!
மேடக்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை கடைகள் மீது பாஜகவின் இளைஞர் அணியின் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலாக வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேடக் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேடக் நகரில் பசுவதையை தடை செய்யக் கோரி பாஜகவினர் நேற்று பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின் போது மாட்டிறைச்சியை விற்பனை செய்த கடைகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை மாட்டிறைச்சி விற்பனை செய்த சமூகத்தினர் தடுக்க முயற்சித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.

மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் மீதான பாஜகவினர் தாக்குதலே இரு சமூகங்களுக்கு இடையே மோதலுக்கு காரணமானது. இதனால் மேடக் நகரில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில் மேடக் நகரில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்திருப்பதால் பதற்றம் தொடருகிறது. இந்த முழு அடைப்புக்கு விஎச்பி, பஜ்ரங்க் தள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதனையடுத்து மேடக் நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேடக் நகரில் மாட்டிறைச்சி கடைகள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் இரு சமூகங்களிடையே பதற்றத்தை, மோதலை ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு வதந்தியையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்; வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேடக் நகரில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படும் நேரத்தில் இத்தகைய மோதல்கள் திட்டமிட்டே நடத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications