தெலுங்கானா விவகாரம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்பட்ட கூச்சல், குழப்பம்அமளி காரணமாக நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 15வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், முதல்நாளே தெலுங்கானா விவகாரம், சீக்கிய கலவர பிரச்னை, ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம், அருணாச்சல பிரதேச மாணவர் கொலை விவகாரம் உட்பட பல பிரச்னைகளை வலியுறுத்தி பல கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் தெலுங்கானா பிரச்சினையை ஆந்திர மாநில எம்.பி.க்கள் எழுப்பினர். இந்நிலையில், 2வது வாரத்தின் முதல் நாளாக நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.

இரு அவைகளிலும் அவைத் தலைவர்கள் வரும் முன்பே, ஆந்திராவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று தெலங்கானா விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை சீமாந்த்ரா பகுதி உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். மைக்கை பறிக்க முயன்ற அவர்கள், பேப்பர்களை கிழித்து எறிந்தனர். இதனால்,மாநிலங்களவை அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்னை எதிரொலியாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கூடிய போதும் அமளி நீடித்ததால், மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications