சந்திரபாபு நாயுடு கைது.. டயர்களை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல்.. கடையடைப்பு!
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே கடைகளை அடைத்தும் சாலை மறியல் செய்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியால் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருக்கிறதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு 3 மணி நேரம் காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். இதையடுத்து தமிழக ஆந்திர எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் சொந்த ஊர் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள்.
#WATCH | Telugu Desam Party leaders and activists stage a protest against the arrest of former Andhra Pradesh CM N Chandrababu Naidu at the Annapurna Sarukulu centre in Tirupati. pic.twitter.com/oBc1wmVYnP
— ANI (@ANI) September 9, 2023
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து அவருடைய குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவின் குப்பம், சித்தூர் பகுதிகளில் கட்சியினர் மறியல் செய்து வருகிறார்கள். சாலைகளில் டயர்களை கொளுத்தி பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸார் 200 பேரை கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிகம் இருக்கும் ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சாலைகளில் டயர்களை எரித்தும் கட்சியினர் போராடி வருகிறார்கள். மேலும் குப்பம் பகுதியில் கடைகளை அடைத்தும் போராட்டங்கள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications