தாய்லாந்து-கம்போடியா மோதல்.. இன்று மலேசியாவில் முக்கிய பேச்சுவார்த்தை! அமைதி திரும்புமா?
மலேசியா: எல்லை விவகாரம் தொடர்பாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே திடீரென மோதல் எழுந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பும் இன்று மலேசியாவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல் ஜசீரா ஊடகத்தில் வெளியான தகவலின்படி, தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் ஃபும்தம் வெச்சயா அந்நாட்டு தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார் என்றும், கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு மலேசியா ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவராக மலேசியா உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய மலேசியா முன்வந்துள்ளது. சமீபத்திய மோதல்களில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இரு நாடுகளும் தங்களுக்குள் 817 கி.மீ தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் மாறி மாறி பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்த வாரம் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார். மேலும் இரு நாடுகளும் பிரச்சனைகளை தூதரக ரீதியாக தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் தொலைபேசியில் பேசி போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார். இருப்பினும், டிரம்ப் இரு தலைவர்களிடமும் பேசிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் மோதல்கள் வெடித்தன.
தாய்லாந்து பொதுமக்கள் மீது கம்போடியா படைகள் தாக்குதல் நடத்துவதாக தாய்லாந்து குற்றம் சாட்டியது. ஆனால் தாய்லாந்தின் குற்றச்சாட்டை கம்போடியா மறுத்தது.
கம்போடியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம், தாய்லாந்து மீது குற்றம் சாட்டியுள்ளது. அதாவது தாய்லாந்து வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் மீது பீரங்கி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பழங்கால கோவில்கள் சேதமடைந்ததாகவும் கம்போடியா தெரிவித்துள்ளது.
கம்போடியா படைகள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும், தொலைதூர ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக டா மோன் தாம் மற்றும் பிரியா விஹார் ஆகிய பழங்கால இந்து கோவில்கள் மீது உரிமை கோருவதில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications