போலீஸ் அங்கிள்.. பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார் எங்க அம்மாவை.. 3 வயது சிறுவன் "சம்பவம்"
போபால்: அம்மா திட்டியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 3 வயது சிறுவன் போலீஸ் நிலையம் சென்று பேப்பரில் புகார் எழுதிக்கொடுத்து கையெழுத்திடுவது போல வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீட்டில் அம்மா, அப்பாவிடம் திட்டு வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏன் பல 90 கிட்ஸ்கள் வாங்காத அடியே கிடையாது..
இப்போதைய 2 கே கிட்ஸ்கள் எல்லாம் இதை சகித்துக்கொள்வது இல்லை என்று நெட்டிசன்கள் கூட அவ்வப்போது மீம்ஸ்கள் போட்டு ரசிக்க வைக்கின்றனர்.
போலீசில் புகார்
அம்மா, அப்பாவிடம் அடி ..ஆசிரியரிடம் அடி என நாங்க வாங்காத அடியே கிடையாதுப்பா.. என நெட்டிசன்கள் சிலாகித்து கொண்டு மீம்ஸ்களை போட்டு 2 கே கிட்ஸ்க்ளை சீண்டி வருகின்றனர். நெட்டிசன்களின் மீம்ஸ்கள் எல்லாம் உண்மைதானோ என்னமோ என்று எண்ணும் அளவிற்குதான் அவ்வப்போது தற்போது நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நமக்கு எண்ண தோன்றுகிறது. அப்படித்தான் மத்திய பிரதேசத்தில் அம்மா திட்டியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி 3 வயது பாலகன் ஒருவன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளான்.
இணையத்தில் பரவும் வீடியோ
இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிக்க வைத்துள்ளது. 3-வயது பாலகன் தனது தந்தையுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு கையெழுத்திடும் காட்சிகளும் இணையத்தில் பரவி நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டது. வியப்பையும் போலீஸ் நிலையத்தை கலகலாப்பாக்கிய இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றி பர்ஹன்பூர் போலீசார் தரப்பில் கூறியதாவது:
எனது மிட்டாய்களை திருடிவிட்டதாக
கடந்த ஞாயிற்றுக்கிழமை 3-வயது சிறுவன் தனது தந்தையுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தான். சிறுவனின் தந்தை ஏதாவது புகார் அளிக்க வந்திருப்பதாக முதலில் நாங்கள் நினைத்தோம். ஆனால், அந்த சிறுவன் தான் தனது அம்மாவுக்கு எதிராக புகார் அளிக்கப்போவதாக கூறி எங்களை வியக்க வைத்தான். மேலும், தனது அம்மா எனது மிட்டாய்களை திருடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தான்.
சிறுவனிடம் கையெழுத்திடுமாறு கூறினார்
சிறுவன் அளித்த புகாரை போலீஸ் நிலையத்தில் பொறுப்பு அதிகாரியாக இருந்த பிரியங்கா நாயக் பேப்பரில் குறித்துக்கொண்டதோடு சிறுவனிடம் கையெழுத்திடுமாறு கூறினார். சிறுவனும் சற்றும் யோசிக்காமல் பேப்பரில் எதையோ கிறுக்கினான்'' என்றனர். சிறுவன் போலீசாரிடம் முறையிடும் காட்சிகளும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அம்மா திட்டினார்
இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், 'குளித்து முடித்த பிறகு நெற்றியில் கருப்பு பொட்டு வைக்க கூடாது என அடம் பிடித்தான். இதனால், அவனது அம்மா (எனது மனைவி) திட்டினார். இதனால், கோபம் அடைந்த இவன், அம்மா மீது போலீசில் புகார் கொடுக்க போகிறேன். என்னை அழைத்து கொண்டு போங்கள் என என்னிடம் அடம் பிடித்தான். எனவே அழைத்து வந்தேன்'' என்றார்.
சைக்கிள் தருவதாக உள்துறை அமைச்சர் உறுதி
அம்மா மீது 3 வயது சிறுவன் புகார் அளிக்க போலீஸ் நிலையம் வந்தது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வீடியோ கால் வாயிலாக பேசி, சிறுவன் விரும்பியதை செய்து கொடுப்பதாகவும் தீபாவளி பண்டிகைக்காக சைக்கிளும் சாக்கலேட்டுகளும் அனுப்பி வைப்பதாக கூறினார்.