ப்ப்ப்ப்ப்பா.. 9 லட்சம் லிட்டர் சாராயத்தை 'எலி' குடிச்சிருச்சாம்.. சொல்வது பீகார் போலீஸ்!
பீகாரில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் லிட்டர் சாராயத்தையும் எலி குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாட்னா: பீகாரில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் லிட்டர் சாராயத்தையும் எலி குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கதை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை நடத்தி வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது.
பீகாரில் மது விலக்கை மீறும் வகையில் யாராவது கள்ளச் சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடித்து விட்டு ரோட்டில் ரகளையில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக விற்பனை
மது விலக்கை முழுமையாக அமல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் மதுபானங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி ஒரு சில இடங்களில் சரக்கு விற்பனை செய்யப்பட்டது.
9 லட்சம் லிட்டர் பறிமுதல்
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். கிட்டதட்ட 9 லட்சம் லிட்டருக்கும் மேல் சாராயம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மாயமான சரக்கு பாட்டீல்
இந்நிலையில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சரக்கு பாட்டீல்கள் மாயமானதாக தகவல் வெளியானது. அண்மையில் நடைபெற்ற அம்மாநில காவல்துறையினர் கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டது.
எலி குடிச்சிருச்சு
அப்போது சில பாட்டீல்களை அழித்துவிட்டதாக கூறிய போலீசார் எஞ்சிய சரக்குகளை மது பிரியம் கொண்ட எலிகள் குடித்து விட்டதாக தெரிவித்தனர். சாராயத்தை எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறையினர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐஜி தலையிட வலியுறுத்தல்
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள காவல்துறை கூடுதல் இயக்குநர் எஸ்கே.சிங்கால் இந்த விவகாரத்தில் பாட்னா மண்டல ஐஜி தலையிட்டு விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக தெரிவத்துள்ளார். குற்றம் கண்டுபிடிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
போலீஸ் அசோசியேஷன் தலைவர் கைது
இதனிடையே பீகார் போலீஸ் அசோசியேஷன் தலைவர் நிர்மல் சிங், மற்றும் உறுப்பினர் ஷாம்ஷெர் சிங் ஆகியோர் மதுகுடித்ததற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும மே 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.