''எதிரியின் எதிரியை நண்பனாக்கு'': பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அட்வைஸ்
டெல்லி: எதிரிக்கு எதிரியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள் என்று பாஜக தலைமைக்கு ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததும், பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும், மோடியும் கடந்த சனிக்கிழமை ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்கள் பய்யாஜி ஜோஷி மற்றும் சுரேஷ் சோனி, இணை பொதுச் செயலாளர்கள் தத்தாத்ரேயா ஹொஸ்போலே மற்றும் கிருஷ்ணன் கோபால் அப்போது உடனிருந்தனர்.
அப்போது தேர்தல் முடிவுக்கு பிந்தைய நிலைப்பாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில், பாஜக கூட்டணியால் 272 தொகுதிகளை கைப்பற்ற முடியாவிட்டால், பிற கட்சிகளின் ஆதரவை கோருவது பற்றி விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக காங்கிரசுடன் நெருக்கமாக இல்லாத மாநில கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும்படி பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப்போல காங்கிரசை விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கட்சிகளை இனம் கண்டு பாஜகவுக்கு ஆதரவு அளிக்க அழைக்குமாறு ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, எந்த கட்சி ஆதரவு அளித்தாலும் அதை பாஜக ஏற்கும் என்று அக்கட்சி தலைவர்கள் தற்போது கூற ஆரம்பித்துள்ளனர். இதனிடையே இன்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.