அருமையான பல்டி.. பிரதமர் மோடிக்கு கட்சி வேறுபாடின்றி நன்றி சொன்ன கர்நாடக சட்டசபை
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் கூறியிருக்கும் நிலையில், கர்நாடக சட்டசபையில் பிரதமர் மோடிக்கும், காவிரிக்காக உண்ணா விரதம் இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடக ஒருநாள் அவசர சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபை கூடியதும், எழுந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக), கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை துரித கதியில் அமைக்க முடியாது என மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் தலை மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி தற்காலிகமாக அகன்றுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். அப்போது மதசார்பற்ற ஜனதாதள உறுப்பினர் தத்தா எழுந்து, மத்திய அரசு இரு நாட்களில் தனது முடிவை மாற்றிக்கொள்ள ஏதோ ஒரு அழுத்தம் போயிருக்க வேண்டுமல்லவா.. அந்த அழுத்தத்தை கொடுத்தது தேவகவுடாவின் உண்ணாவிரதம்தான் என்றார்.
இப்படி இரு கட்சிகளும் அரசியல் லாபத்திற்காக பேசுவதை பார்த்த கர்நாடக அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான, ரமேஷ் குமார், "இந்த விஷயத்தில் அரசியல் லாபம் பார்க்காதீர்கள். மாநில நலனுக்காக அனைவரும் ஒருமித்து நிற்க வேண்டும். பிரச்சினைகளின்போது ஒன்றாக இருப்பதாக கூறிய நீங்கள் இப்போது, எங்களால்தான் இது நடந்தது என மாறி மாறி புகழ்வது நியாயமில்லை. இது கர்நாடக மக்களின் வெற்றி. மக்கள்தான் எஜமானர்கள். நாம் அவர்களின் ஊழியர்கள். எனவே புகழ்ச்சியை நாம் ஏற்க முடியாது. பிரதமர் மோடியின் தலையீடு இன்றி அட்வகேட் ஜெனரல் இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய முடியாது என்பதை உணர்கிறோம். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். தேவகவுடாவையும் ம.ஜ.த கட்சிக்குள் ஒடுக்க வேண்டாம். அவர் கர்நாடகாவின் சொத்து. அவருக்கும் நன்றி" என்றார்.
இதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா பேசுகையில், கர்நாடக அரசும் உரிய நெருக்கடிகளை கொடுத்தது. இதற்கு மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியே என்றார்.












Click it and Unblock the Notifications