இந்தியா வரும் ஒபாமா... அணு ஆயுதத்தை வைத்து விளையாட்டுக் காட்டலாம் பாக். தீவிரவாதிகள்!
டெல்லி: இந்தியக் குடியரசுத் தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அழைத்த செயல் உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியதாகும். இருப்பினும், உலக அளவில் தூதரக அளவிலும், அரசியல் அரங்கிலும் வளரும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் அண்டை நாடுகளுடனான சில முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது கவலை தருகிறது.
இந்தியாவுக்கு எதிரான நாடாகவே பாகிஸ்தான் வளர்ந்து நிற்பது புதிய விஷயமல்ல. அதேசமயம் பாகிஸ்தானுக்குள் பாதுகாப்பு நிலைமை சீர்கெட்டு வருவது இந்தியாவுக்கு ஆபத்தானது. மேலும் அங்கு தீவிரவாத குழுக்கள் பலம் பெற்று வருவதும், தீவிரவாதிகள் அதிகரித்து வருவதும் ஆபத்தானதாகும். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தில் தீவிரவாத ஆதரவு அதிகாரிகளும் வீரர்களும் பெருகியுள்ளனர். இது இந்தியாவுக்கு நிச்சயம் கவலை தரும் அம்சமாகும்.
பாகிஸ்தான் அணு ஆயுதத்தால் ஆபத்து
சமீபத்திய அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கான கவுன்சில் கணிப்புப்படி 2020ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானிடம் 200 அணுகுண்டுகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை எண்ணிக்கை பெரிதல்ல. ஒரு சாதாரண தெர்மோ நியூக்ளியார் குண்டின் மூலம் போயி அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விட முடியும். மேலும் பாகிஸ்தானால் 200 அணு குண்டுகளையும் மொத்தமாக பயன்படுத்தும் வாய்ப்பும் நிச்சயம் கிடைக்காது. ஆனால் அவை இருப்பது என்பதே இந்தியாவுக்கு அபாயகரமானதுதான்.
தீவிரவாதிகள் கைக்குப் போனால்
ஆனால் இந்த ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இதுதான் இந்தியாவின் உண்மையான கவலையாகும். பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பல தீவிரவாதக் குழுக்கள் அல் கொய்தாவிலிருந்து பிரிந்து உருவாகியுள்ளன. தெஹ்ரிக் இ தலிபான், ஜந்துல்லா உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் வலுப்பெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு இவர்கள் இடம் பெயர்ந்து பாகிஸ்தானில் குடியேறி வருகிறார்கள். இதனால் இந்தியாவுக்குத்தான் உண்மையான ஆபத்து உள்ளது.
சோவியத் படைகள், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது ஏற்பட்ட அதே நிலைதான் ஆப்கானிஸ்தானை விட்டு தற்போது அமெரிக்கப் படைகள் வெளியேறும்போதும் ஏற்படும். முன்பு சோவியத் படைகள் வெளியேறியபோது சிதறிக் கிடந்த தீவிரவாதக் குழுக்களை தனக்கு சாதகமாக திருப்பி அவர்களை காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு சாதகமாக மாற்றியது பாகிஸ்தான். இப்போதும் அதே நிலைமை ஏற்படலாம்.
மேலும் பாகிஸ்தானில் தற்போது ராணுவ நிலைகள் மீது அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது, இந்தியாவுக்குத்தான் கவலை தருவதாக உள்ளது. காரணம், பாகிஸ்தான் ராணுவத்தின் அபாயகரமான ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போனால் பாகிஸ்தானை விட இந்தியாதான் அதிக பாதிப்பைசந்திக்க நேரிடும்.
இந்தியாவுக்கு மட்டும்தான் கவலையா
பாகிஸ்தானிலிருந்து திருடப்படும் ஒரு அணு குண்டால், இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கூட பேராபத்தை ஏற்படுத்த முடியும். இங்கிருந்து திருடப்படும் அணு குண்டை இங்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியத்தில் தீவிரவாதிகள் இல்லை. மாறாக அமெரிக்காவில் அதை பயன்படுத்தலாம், வேறு பல நாடுகளிலும் அதை பிரயோகிக்கலாம்.
அணு ஆயுதத்தை வைத்து பாகிஸ்தான் விளையாடலாம்
தற்போது பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடாக மாறி விட்டது. பலமுனைகளிலிருந்தும் அதற்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. பல விஷயங்களில் அது பின் தங்கிப் போய் விட்டது. மேலும் மோடியின் கையில் இந்தியா வந்திருப்பது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. முன்பெல்லாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், ஊடுறுவல்காரர்களும் தாக்குதல் நடத்தினால், அத்துமீறினால் இந்திய ராணுவத்தின் பதிலடி என்பது மிகவும் மென்மையாகவே இருக்கும். ஆனால் மோடி வந்த பின்னர் அதிரடியாக இந்தியப் படையினர் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
மேலும் தூதரக ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் இந்தியா ஏற்கனவே பலமுறை பாகிஸ்தானுக்கு மூக்கறுத்துள்ளது. மோடிக்கு உலக அளவில் பெருகி வரும் செல்வாக்கும் பாகிஸ்தானை சோர்வடைய வைத்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவுக்கு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக ஒபாமா வரவுள்ளார். இது பாகிஸ்தானுக்கு நிச்சயம் பெரிய கவலை தரும் விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இதை சீர்குலைக்க செப்டம்பர் 26 தாக்குதலைப் போன்ற ஒரு தீவிரவாதத் தாக்குதலை நடத்த முனையலாம். குறிப்பாக அணு ஆயுதங்களை வைத்து விளையாட்டுக் காட்ட முனையலாம். இந்தத் தாக்குதலை இந்தியாவில் மட்டுமல்லாமல் வேறு எங்கும் கூட நடத்த அவர்கள் முயலலாம்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்
எனவே இந்தியா இந்த முயற்சிகளைத் தடுக்க தனது ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும், அதை திறம்பட்டதாக உருவாக்க வேண்டும். கடலோர, எல்லைப் புற பாதுகாப்பை பலபப்டுத்த வேண்டும். புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும் இதுவரை இல்லாத பெரிய தாக்குதல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா இருக்க வேண்டும். அதைத் தடுக்க, சமாளிக்க என்ன தேவை என்பதை செய்து கொள்ள வேண்டும். ஆயத்தமாக இருக்க வேண்டும். தாக்குதல் நடப்பதாக இருந்தால் அதை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.
பாகிஸ்தான் போன்ற நாட்டை பக்கத்தில் வைத்துக் கொண்டு சவால்களை சந்திப்போம் என்று கூறுவதை விட அந்த சவால்களை எப்படி முறியடிப்பது என்ற தீவிர எண்ணத்துடன் இருப்பதே நல்லது.