ஜஸ்ட் 20,000 ஓட்டுகள்தான்.. சீட் கேட்டா தர மாட்டீங்களா? குஜராத்தில் பாஜகவை அதிர வைத்த "தலைக்கட்டு"
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜகவின் முக்கிய 'தலைக்கட்டு' ஒருவர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார். இதனால் தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் வெற்றி கொடி நாட்டி வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியை மீண்டும் எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பத்ரா தொகுதி
வதோதரா மாவட்டத்தின் 'பத்ரா' சட்டமன்ற தொகுதியில் பாஜகவுக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த ஒருவரே போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் அரசியலை பொறுத்த அளவில் வதோதரா மாவட்டம் பெரிய மாவட்டமாகும். இதில் 10 தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 182 தொகுதிகள் இருக்கும் நிலையில் இந்த 10 தொகுதிகளை முழுமையாக தங்கள் வசம் கொண்டு வர பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த முயற்சியின் பலனாக 7 தொகுதிகளை கட்சி முழுமையாக கைப்பற்றிவிட்டது.

சுயேட்சை
அதேபோல மீதமுள்ள 3 தொகுதிகளில் 2 தொகுதியில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதிலிருந்து 1 எம்எல்ஏ சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். எனவே இந்த தொகுதியும் பாஜக வசம் சென்றுவிட்டது. தற்போது மீதம் இருப்பது 2 தொகுதிகள்தான். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் 'மது ஸ்ரீவஸ்தவ்' என்பவர் 'வகோடியா' தொகுதியில் நிற்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீட் இல்லை
இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தற்போது இதேபோல பிரச்னை 2022ம் ஆண்டு தேர்தலிலும் மேலெழுந்துள்ளது. அதாவது, வதோதரா மாவட்டத்தின் 'பத்ரா' சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் 'தினேஷ் படேல்' நிற்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் இதே தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் 19,027 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனவே இம்முறை இவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் கடுப்பான திணேஷ் படேல் சுயேட்சையாக நிற்க முடிவெடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பாஜகவுக்கு மேலும் தலைவலி அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே ஒருமுறை
ஏற்கெனவே 'வகோடியா' தொகுதியை இழந்தது மாதிரி இந்த தொகுதியையும் இழந்துவிடுவோமோ என்று கட்சி பயப்படுகிறது. தற்போது பத்ரா தொகுதியில் பாஜக சார்பில் 'சைதன்யா சிங்' வேட்பாளராக களம் இறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் 'சிட்டிங்' எம்எல்ஏ 'ஜஷ்பால் சிங் தாக்கூர்' களம் காண்கிறார். அதேபோல ஆம் ஆத்மி தரப்பில் சந்தீப் சிங் ராஜுக்கு 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதியில் நான்கு முனை போட்டி உருவாகியிருக்கிறது.

தொகுதி நிலவரம்
பத்ரா தொகுதியில் மொத்தம் 2,37,788 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு கடந்த 2017 தேர்தலில் 92,998 வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜக சார்பில் தோல்வியடைந்த வேட்பாளர் மது ஸ்ரீவஸ்தவ், 73,971 வாக்குகளை பெற்றிருந்தார். 2022 தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால் பாஜக இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனும் நெருக்கடியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications