டெல்லி, கேரளாவைத் தொடர்ந்து.. உத்தரகாண்டிலும் இரவுநேர ஊரடங்கு...! நீளும் பட்டியல்
டேராடூன்: கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக டெல்லி கேரளாவைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

டெல்லி, கேரளாவில் ஊரடங்கு
இதன் தொடர்ச்சியாக அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் , நேற்று டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து இரவு நேர ஊரடங்கினை அம்மாநில அரசுகள் அமல்படுத்தின. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இன்று இரவு முதலே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்டிலும் இரவு நேர ஊரடங்கு
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் , பொதுமக்கள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டுமெனவும், நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென உத்தரகாண்ட் காவல்துறை கூறியுள்ளது.

நிகழ்ச்சிகளுக்கு தடை
புத்தாண்டு வருவதையொட்டி அது தொடர்பாகக் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் இரவும் நேரங்களில் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை உத்தரகாண்ட் அரசு பிறப்பித்துள்ளது. இன்று இரவு முதல் அடுத்த மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். இந்த நாட்களில் இரவில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது, விழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டமாகக் கூடுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது.

சில சேவைகளுக்கு அனுமதி
அதே நேரத்தில், சுகாதாரம், சுகாதார பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், தபால் சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இரவு நேர ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எல்பிஜி கேஸ் ஆகியவற்றின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகியவைக்கும் ஊரடங்கில் இருந்து தளர்வளிக்கப்ப்பட்டுள்ள நிலையில், தனியார் வாகனங்களும் அவசர தேவைகளுக்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications