போலீஸ் நடந்துகிறதே சரியில்லையே.. இடதுசாரி சிந்தனையாளர்கள் கைதில் சந்தேகம் கிளப்பும் நீதிபதி
டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்கள் ஐந்து பேர் கைது விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு நிராகரித்துள்ளது. ஆனால், அதில் நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக, இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
உச்சநீதிமன்றம் தலையிட்டு போலீஸ் காவலில் இவர்களை விசாரிக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், எனவே சிறப்பு விசாரணை குழுவை கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், ரோமிலா தாப்பர் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
சந்திரசூட் கூறியதாவது: மனுதாரர் எந்த ஒரு அரசியல் லாபத்திற்காகவும் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. மகாராஷ்டிரா காவல்துறை இந்த விவகாரத்தில் செயல்படும் விதம் என்பது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டது, விசாரணைக்கு உகந்ததுதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தலாம். மாறுபட்ட கருத்தை கூறுவதாலேயே எதிர்தரப்பு குரலை ஒடுக்கக் கூடாது. சுதந்திரம் என்பது நிவர்த்தி செய்யப்பட முடியாத ஒன்று. இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை காவல்துறை மீடியாக்களுக்கு கசிய விடுகிறது.
இதன் மூலமாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்க, காவல்துறை முயற்சி செய்வதாக சந்தேகிக்கிறேன்.
கைது செய்யப்பட்டுள்ள சுதா பரத்வாஜ் எழுதியதாக கூறப்படும் கடிதம் மீடியாக்களில் ஒளிபரப்பப்படுகிறது. காவல்துறை தேர்ந்தெடுத்து சில ஆவணங்களை மட்டும் மீடியாக்களுக்கு கசிய விடுகிறது. இதன் மூலமாக நியாயமான விசாரணை நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.