மிசோரோமில் வாழும் ‘உலகிலேயே பெரீய்ய குடும்பம்’... மொய்த்தெடுத்த வேட்பாளர்கள்
அய்ஸ்வால்: ஒரு குடும்பத்தில் ஐந்து ஓட்டுக்கள் இருந்தாலே நமது வேட்பாளர்களின் ஓட்டுக் கேட்கும் விதம் பற்றிக் கேட்க வேண்டாம். இந்நிலையில் மிசோரோமில் வாழும் உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஓட்டு வங்கிக் குடும்பமாக உள்ளது. அவர்கள்மீது தான் அங்குள்ள வேட்பாளர்கள் அனைவரின் கண்ணும் உள்ளது.
கலவரம் காரணமாக கடந்த 1997ம் ஆண்டு திரிபுராவுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி மிசோரமில் தன்னார்வ அமைப்பினர் நடத்தும் 3 நாள் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக இன்று நடை பெறுவதாக இருந்த லோக்சபா தேர்தல் வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் மிசோரோமில் அதிக வாக்காளர்களைக் கொண்ட குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது. குடும்பத்தை உருவாக்கச் சொன்ன கிராமத்தை உருவாக்கினாரே என விஜயகாந்த் படப்பாடல் ஒன்றை தான் நினைவூட்டுகிறது அந்தக் குடும்பம்.
நல்லதொரு குடும்பம்... பல்கலைக்கழகம்
மிசோரமின் பக்த்வாங் கிராமத்தில் வாழும் சயோனா சானா தான் அந்தப் பெரிய குடும்பத்தின் தலைவர். சயோனாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகள்.
சுவாந்தர் ரன்...
பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்'.
விடுதி போன்ற வீடு...
தற்போது 70 வயதாகும் சயோனாவின் வீடு விடுதி போல காணப்படுகிறது. மூன்று தச்சு வேலையகங்களை வைத்திருக்கும் சயோனா, அது தவிர, காய்கறித் தோட்டங்கள், கோழி, பன்றிப் பண்ணைகளில் தொடங்கி பள்ளிக்கூடம், மைதானம் வரை வைத்திருக்கிறார்.
பிரித்துக் கொடுக்கப்பட்ட வேலைகள்...
சயோனா குடும்பத்து ஆண்கள் தச்சு வேலையைக் கவனிக்க, பெண்கள் தோட்டம், பண்ணை மற்றும் சமையல் வேலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனராம்.
அம்மாடியோவ்....
சயோனா குடும்பத்தில் ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு மட்டும் சராசரியாக 90 கிலோ அரிசி, 40 கிலோ உருளைக் கிழங்கு தேவைப்படுகிறதாம். அசைவம் என்றால், 30 கோழிகளும் இரண்டு பன்றிகளும் வேண்டுமாம்.
எல்லாமே சுழற்சி முறை தான்...
சயோனாவுக்கு அவருடன் உணவு மேஜையில் யார் உட்கார்ந்து சாப்பிடுவது, வேலைக்குக் கூடப் போவது என்பதிலிருந்து படுக்கையைப் பகிர்ந்துகொள்வது உட்பட அனைத்தையும் சுழற்சி முறையில் அட்டவணைப் படுத்தியுள்ளாராம். இதனால் மனைவிகளுக்கிடையே பிரச்சினை வருவதில்லையாம்.
நிர்வாகப் பொறுப்பு...
கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் சயோனா, ஊரில் செல்வாக்கு மிக்க ‘ஹம்த்லன் ருன்புய்' தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார்.
ஊருக்கே ராஜா....
"குடும்பத்தில் மட்டுமல்ல; ஊரிலும் அவர் ஒரு ராஜா மாதிரிதான். சாப்பாடு, கல்வி, மருத்துவச் செலவுக்குத் தேவை என்று யார் போய் நின்றாலும் தட்டாமல் உதவி செய்வார். அதனாலே அவர்மீது இந்த ஊரில் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நிறைய பெண்கள் அதனால்தான் அவரை விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டார்கள்'' என சயோனா பற்றி கூறுகிறார்கள் ஊர்மக்கள்.
காதல் திருமணங்கள்....
சயோனாவின் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள் தான் என்றாலும், எல்லாத் திருமணங்களையும் பூரண சம்மதத்தின்பேரிலேயே செய்து கொண்டிருக்கிறாராம் சயோனா.
நான் தான் மூத்த நிர்வாகி....
முதல் மனைவி ஜத்தியாங்கிக்கு தற்போது 70 வயதாகிறதாம். முதல் திருமணம் நடந்தபோது சயோனாவுக்கு 17 வயதாம். "அவர் கடவுள் மாதிரி. அவரை எல்லோருமே விரும்புவார்கள். அவரால் நிறைய பேரை வாழவைக்க முடியும். நான் அவரை ஒரு கைதி மாதிரி ஆக்கிவிடக் கூடாது அல்லவா?" என்று கேட்கும் ஜத்தியாங்கிக்கு, சயோனாவின் மனைவி தான் அப்பெரிய குடும்பத்தின் மூத்த நிர்வாகி எனப் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.
மணாளனே மங்கையின் பாக்கியம்...
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சயோனாவின் முதல் மனைவியைப் போலவே அச்சுப் பிறழாமல் பேசுகிறார் அவரது கடைசி மனைவியான முப்பது வயது சயாம்தாங்கி. "உலகத்தில் எல்லோருக்கும் தாங்கள் விரும்பிய கணவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனக்குக் கிடைத்திருப்பதைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். அவரைக் கவனித்துகொள்வது கடவுளைக் கவனித்துக்கொள்வதற்குச் சமம்" என்கிறார் அவர்.
கடவுளின் ஆசிர்வாதத்தால் 39 மனைவிகள்....
மிகுந்த பொறுப்புடன் தனது குடும்பம் பற்றிப் பேசுகிறார் சயோனா. அதாவது, ‘என்னுடைய தந்தை சாலியா சானாவுக்கு ஏழு மனைவிகள், நாங்கள் 29 பிள்ளைகள். கடவுள் என்னை மேலும் ஆசிர்வதித்திருக்கிறார். கடவுள் என்னிடத்தில் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். என் குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவனின் சந்தோஷ வாழ்க்கைக்கும் நான் உழைக்க வேண்டும்; உழைக்கிறேன். இதற்கு மேலும் மனைவி - குழந்தைகளைத் தந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்" என்கிறார்.
நான் தவறு செய்யவில்லை...
பலதார மணம்பற்றிப் பேசும்போது, "எங்கள் சமூகத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. என்னை விரும்பியவர்களை நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். அதனால், நான் எதுவும் தவறு செய்வதாக நினைக்கவில்லை" என கூறுகிறார் சயோனா.
மாநிலத்தின் மக்கள்தொகையை அதிகமாக்கும் முயற்சி...
இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நியாயமா என்று கேட்டால், "நாட்டிலேயே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று எங்களுடையது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என நியாயம் பேசுகிறார் சயோனா.
சுவாந்தர் குடும்பம்...
மேலும், எங்கள் குடும்பமும் வாழ்க்கையும் கூட்டுறவுக்கான உதாரணம். இந்தக் கூட்டுறவுதான் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும். நான் இப்படிப்பட்ட வாழ்க்கையைப் புதிய தலைமுறைக்கான வாழ்க்கையாகப் பார்க்கிறேன். அதனால்தான் என் வீட்டுக்கும் பள்ளிக்கும் மைதானத்துக்கும்கூட புதிய தலைமுறை (சுவாந்தர்) என்றே பெயரிட்டிருக்கிறேன்'' என விளக்கமும் அளிக்கிறார் சயோனா.
பிறந்தநாள் கொண்டாட்டம்...
வரும் ஜூலை 21 அன்று சயோனாவின் 70-வது பிறந்த நாள் வருகிறது. அதனை ஒரு பெரிய விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர் சயோனா ஊரார். அப்போது சயோனாவின் வாக்கு வங்கியில் இன்னொரு வாக்கு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சிரித்துக் கொண்டே கூறுகின்றனர் அவர்கள்.