வெறும் 4 நாட்களில் மாநில கட்சிகளை ஒன்றாக இணைத்த பாஜக.. உருவாகிறது புதிய வலுவான அணி!
கர்நாடகாவில் கடந்த நான்கு நாட்களாக நடந்த அரசியல் மாற்றங்கள், மாநில கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்துள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த நான்கு நாட்களாக நடந்த அரசியல் மாற்றங்கள், மாநில கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்துள்ளது. மாநில கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இது பெரிய வழிவகை செய்துள்ளது.
கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா பல அரசியல் மாற்றங்களை செய்ய உள்ளது.
அழைப்பு விடுத்துள்ளார்
புதன் கிழமை பெங்களூரில் கர்நாடக முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி, மிக முக்கியமான விஷயம் ஒன்றை செய்ய இருக்கிறார். தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு பாஜக அல்லாத மாநில கட்சிகளை மட்டும் அழைக்க உள்ளார். திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ளும்.
கூட்டணி ஆச்சாரம்
மஜத கட்சி செய்திருக்கும் இந்த முடிவு இப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க வழிவகை செய்துள்ளது. ஏற்கனவே மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் மூன்றாவது அணி அமைக்க மாநிலதலைவர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது ஒரே மேடையில் இந்த மாநில கட்சிகள் இடம்பிடித்தால் அது பெரிய சந்திப்பாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய அடித்தளமாக இருக்கும்.
காங்கிரஸ்
மூன்றாவது அணி உருவானால் அது கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டை பிரித்து மீண்டும் பாஜகவை வெற்றிபெற வைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் காங்கிரஸ் கட்சி எப்படியாவது இந்த மூன்றாம் அணியுடன் இணைந்து அதை இரண்டாவது அணியாகவே முன்னிறுத்தலாம் என்று முடிவிற்கு வந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 4 நாட்களில் நடந்த அரசியல் மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கு பல படிப்பினைகளை கொடுத்துள்ளது.
மாநில கட்சிகள்
தற்போது திமுக, இரண்டு கம்யூனிஸ்ட், திரிணாமுல், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, , தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி, மதச் சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மிகவும் பலத்துடன் இருக்கிறது. இவர்கள்தான் கண்டிப்பாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மேன் ஆப் தி மேட்சாக இருக்க போவது. இதனால் காங்கிரஸ் கட்சி இவர்களுடன் இருப்பது மட்டுமே அவர்களுக்கு நன்மை பயக்கும். 4 நாள், 56 மணி நேரம் பெய்த அரசியல் மழை ஒன்று, மாநில கட்சிகளை எல்லாம் ஒரே குடைக்குள் நிறுத்திவிட்டு சென்றுள்ளது.