'எனக்கும் பசிக்கும்ல'..திருட சென்ற வீட்டில் கிச்சடி சமைத்து ருசித்த திருடன்.. தட்டோடு தூக்கிய போலீஸ்
கவுகாத்தி: 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் முத்தான பாடல் வரிகள். இந்த வரிகளை போன்றே போலீசார், நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் திருடர்களை திருத்த முடியாது.
3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
என்னதான் கெடுபிடிகள் இருந்தாலும் திருடர்கள் புதுசா, புதுசா எதையாவது யோசித்து திருடி விடுகிறார்கள். சில திருடர்கள் தங்களது வேலை முடிந்தவுடன் நைசாக தப்பித்து விடுகின்றனர். ஆனால் வேறு சில திருடர்கள் திருட சென்ற இடத்தில் விநோதமான முறையில் செயல்பட்டு போலீசாரிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
வேடிக்கையான சம்பவம்
அந்த வகையில் ''திருட போன இடத்தில் தூங்கிய திருடன் போலீசில் சிக்கினான்'' என்பது போன்ற வித்தியாசமான செய்தியை நாம் அவ்வப்போது பார்க்கலாம். இப்படிப்பட்ட ஒரு வேடிக்கையான சம்பவம்தான் அசாமில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியின் ஹெங்கேராபரி பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் திருடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்தான்.
'எனக்கும் பசிக்கும்ல'
வீட்டில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை கையோடு அள்ளிச் செல்லலாம் என்று ஆசையில் திளைத்த திருடனுக்கு கடும் பசி ஏற்பட்டுள்ளது. ''சரி.. சாப்பிட்டு விட்டு மெதுவாகத்தான் போவோமே .. என்ன பண்ணிருவாங்க '' என்று நினைத்த திருடன் வீட்டில் இருந்த அடுப்பை பற்ற வைத்து கிச்சடி சமைக்க தொடங்கினான். ''என்னடா இது.. பூட்டிய வீட்டில் இருந்து சமைப்பது போன்ற வாசனை வருகிறதே'' என்று அக்கம்பத்தினருக்கு சந்தேகம் எழும்ப உடனடியாக விரைந்து வந்தனர்.
கிச்சடியை சமைத்து சாப்பிட்ட திருடன்
அப்போது முழு செஃப் ஆகவே மாறி கிச்சடியை சமைத்து அதனை ருசி பார்த்து கொண்டிருந்த திருடனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், கிச்சடியை சாப்பிட்டு கொண்டிருந்த திருடனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.கிச்சடிக்கு ஆசைப்பட்ட திருடன் இப்போது கம்பியை எண்ணி கொண்டிருக்கிறான்.
அசாம் போலீஸ் செம கலாய்
இந்த வினோத சம்பவம் குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட அசாம் போலீஸ், ''கிச்சடி உடல்நலத்திற்கு நல்லது தான். ஆனால் திருட்டு வேலையில் ஈடுபடும் போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும்" என கிண்டலாக கூறியுள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். ''வெற்று வயிறு பேரழிவுகளுக்கு வழிவகுக்கும்'' என்று ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்.
சாப்பிட்ட பிறகு கைது செய்து இருக்கலாம்...
''என்னதான் திருடனாக இருந்தாலும், அவருக்கும் பசிக்கும்ல'' என்று ஒரு சிலரும், ''ஆசை ஆசையாய் செய்த கிச்சடி முழுவதையும் அவர் சாப்பிட்ட பிறகு கைது செய்து இருக்கலாம்'' என்று சிலரும் கிண்டலாக கமெண்ட்களை கூறி வருகின்றனர்.