ரூ.10000 திருடிய நபரை ரயிலில் இருந்து இழுத்து தர்ம அடி கொடுத்த பயணிகள்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலில் ரூ. 10 ஆயிரம் திருடிய நபரை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து, சரமாரியாக தாக்கி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்ஹானா மாவட்டத்தில் உள்ள ஹப்ரா ரயில் நிலையத்தில் வழக்கம்போல ரயிலுக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரயிலில் இருந்த பயணி ஒருவரிடமிருந்து, யாரும் எதிர்பார்க்காத வேளையில் நபர் ஒருவர் ரூ. 10 ஆயிரத்தை பிடுங்கிக் கொண்டு ஓடினார்.
ஆனால், திருடிய நபரை அங்கிருந்த மற்ற பயணிகள் வளைத்துப் பிடித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் திருடிய நபரை ரயிலில் இருந்து வெளியே தள்ளி சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த பத்தாயிரம் ரூபாய் மீட்கப் பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் திருடனைக் கைது செய்தனர். விசாரணையில் அந்நபரின் பெயர் திலீப் சாட்டர்ஜி எனத் தெரிய வந்துள்ளது. தற்போது சிகிச்சைக்காக அந்நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ரயில் நிலையத்தில் திருடிய நபரை பொதுமக்களே பிடித்து சரமாரியாகத் தாக்கி, போலீசில் ஒப்படைத்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.