போலி பாஸ்போர்ட்டில் ஊடுருவிய பெண் உட்பட 3 பாகிஸ்தானியர்கள் பெங்களூரில் அதிரடி கைது!
பெங்களூர்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூவரை போலி பாஸ்போர்ட் மூலம் ஊடுருவிய குற்றத்தின்பேரில் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு பெங்களூர் பகுதியிலுள்ள ஜெயநகர் அருகேயுள்ள குமாரசாமி லேஅவுட் பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் இம்மூவரும் வசித்து வந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், குமாரசாமி லேஅவுட் போலீசார், அப்பார்ட்மென்டில் வசித்து வந்த கிரண், முகமது ஷஹிப் மற்றும் காசிப் சம்சுதீன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த பஷீர் என்ற இந்தியாவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
துபாயில் கிரண் என்ற பாகிஸ்தான் பெண் வேலை பார்த்தபோது, கேரளாவை சேர்ந்த பஷீருக்கு பழக்கமாகியுள்ளார். அப்போது தான் காதல் வயப்பட்டுள்ளதாகவும், அதற்கு தனது குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.
இதையடுத்து போலி பாஸ்போர்ட் உருவாக்க உதவிய பஷீர் நேபாளம் வழியாக பாகிஸ்தான் குடிமக்களான கிரண் உள்ளிட்ட மூவரையும் பெங்களூர் அழைத்து வந்து இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். நால்வருமே அந்த பிளாட்டில்தான் வசித்து வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இருப்பினும், போலி பாஸ்போர்ட்டில் இவர்கள் இந்தியா வர, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.