இந்துக்களை மதமாற்றம் செய்த தென்னகத்து அவுரங்கசீப்தான் திப்பு சுல்தான்... சாடும் ஆர்.எஸ்.எஸ். 'பஞ்சன்
மும்பை: கர்நாடகா அரசு திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவின் அவுரங்கசீப்பாக லட்சக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தவர் திப்பு சுல்தான் என அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பஞ்சன்யா சாடியுள்ளது.
கர்நாடகா மாநில அரசு திப்பு சுல்தானை சிறப்பிக்கும் வகையில் திப்பு ஜெயந்தி விழாவை நடத்தியது. இதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கர்நாடகா அரசின் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக வன்முறைகள் வெடித்து உயிர் பலியும் நடந்தேறியது.
இந்நிலையில் பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பத்திரிகையான பஞ்சன்யாவில் திப்பு சுல்தான் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
முஸ்லிம் ஓட்டுக்காக
திப்பு சுல்தான் சர்ச்சைக்குரிய நபர். கர்நாடகா அரசு திப்பு ஜெயந்தியை கொண்டாடுவது என்பதே முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்யத்தான். இதனால் திப்புவின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
தென்னகத்து அவுரங்கசீப்
திப்பு சுல்தான் மதச்சார்பற்றவர் என்பது இந்து அமைப்புகளின் கருத்து. அத்துடன் திப்புசுல்தான் சகிப்புத்தன்மையற்ற கொடுங்கோலாட்சியாளர். வட இந்தியாவில் லட்சக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தவர் அவுரங்கசீப். அதேபோல் தென்னிந்தியாவின் அவுரங்கசீப்பாக இருந்தவர் திப்புசுல்தான்.
கோவில் இடிப்பாளர்
தென்னிந்தியாவின் ஏராளமான கோவில்களை இடித்தவர் திப்பு. திப்பு ஜெயந்தியை கர்நாடகா அரசு அரசியல் லாபங்களுக்காக கொண்டாடுகிறது. முஸ்லிம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக இந்த விழாவை சித்தராமையா அரசு நடத்துகிறது.
கர்நாடகத்து லாலு, முலாயம்
சித்தாரமையா கர்நாடகாவின் முலாயம்சிங், லாலு யாதவாக செயல்படுகிறார். தம்மை பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் நாயகனாக முன்னிறுத்துகிறார். பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மையை புரிந்து கொள்ள காங்கிரஸ் மறுக்கிறது.
கெளரிபண்டிகை லீவு எங்கே?
இந்துக்களின் கெளரி பண்டிக்கைக்கு விடுமுறை கோரியபோது அதை நிராகரித்தது கர்நாடகா அரசு. அதே கர்நாடகா அரசுதான் திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி உயிர்பலியானதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. திப்புவுக்கு பதிலாக மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற முஸ்லிம் தலைவர்களின் ஜெயந்தி விழாக்களை நடத்தலாம்.
இவ்வாறு பஞ்சன்யாவில் கூறப்பட்டுள்ளது.