திருப்பதியில் தமிழக பத்திரிகையாளர்கள் 10 பேர் கைது! பல மணிநேரம் கழித்து விடுதலை!!
திருப்பதி : திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதை படம் பிடித்த தமிழக செய்தியாளர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருப்பதி வந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. நேற்று மாலை தனி விமானம் மூலம் ரேனிகுண்டா வந்த ராஜபக்சே, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி சென்றடைந்தார்.

ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வழிபாடு நடத்தினார் ராஜபக்சே. அப்போது ராஜபக்சேவுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
அதை பதிவு செய்து கொண்டிருந்த தமிழக பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். சன் டிவி செய்தியாளர் குணசேகரன், புதிய தலைமுறை மணிகண்டன், தந்தி டிவி காண்டீபன் உட்பட 10 பேர் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அதோடு, செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் உடைத்த போலீசார், சிலவற்றை பறித்துச் சென்றனர். பின்னர், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் சன் டிவி செய்தியாளர் குணசேகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டனர். குணசேகரன் 7 மணி நேரத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சிறைபிடிப்பு சம்பவம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications