மே.வங்கத்தில் ஆட்சி மாற்றமா? வாக்கு சதவீதத்தை வைத்து மோடி சொன்ன வார்த்தை.. மம்தா பானர்ஜி பதிலடி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதற்கட்டமாக 152 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 92.62 சதவீதம் வரை வாக்குகள் பதிவான நிலையில் மாற்றத்துக்காக மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு பீகாரை உதாரணம் காட்டி மம்த பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இன்று வாக்குப்பதிவு நடந்த 152 தொகுதிகளில் அதிகபட்சமாக 134 இடங்களில் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது. இதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தமிழகத்தை போல் இன்று மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அங்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி 142 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதன்பிறகு மே 4ல் ரிசல்ட் வெளியாக உள்ளது.
இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடந்த சட்டசை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 92.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு நடந்த தேர்தலை ஒப்பிடும்போது அதிகம். இதனால் பிரதமர் மோடி, ''மேற்கு வங்க தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இது மாற்றத்துக்கான அமோக ஆதரவாக பார்க்கப்படுகிறது'' என்று கூறினார். பொதுவாக சட்டசபை தேர்தல்களில் வாக்குப்பதிவு அதிகரிக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது பலமுறை சாத்தியமாகி உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி இந்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், ''வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே முடிவாகியுள்ளது; பாஜகவை மக்கள் தெளிவாக நிராகரித்துள்ளனர். ஏனென்றால் இந்த வாக்குகள் அனைத்தும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவரது அரசின் திட்டங்களுக்கும் கிடைத்த ஆதரவாகும். ஆனால் பாஜக தவறாக மதிப்பீடு செய்கிறது. இது மாற்றத்திற்கான வாக்கு அல்ல. மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாகும். மேற்கு வங்க மக்கள் முதல் கட்டத்திலேயே பாஜகவின் முதுகெலும்பை உடைத்துவிட்டனர். இது மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நான்காவது முறையாக ஆட்சியை உறுதிப்படுத்துகிறது.
அதோடு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பாகவே வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுதான் இப்போது நடந்துள்ளது. அரசியல் பிழைப்புக்காக பாஜக திரிபு வாதத்தை முன்வைத்துள்ளது. உதாரணமாக பீகாரில் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு பிறகு தேர்தல் நடந்தது. அங்கும் ஓட்டுப்பதிவு அதிகரித்தது. ஆனால் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. அதுபோன்று தான் மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம் இருக்காது.
முதற்கட்டமாக 152 தொகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 125 தொகுதகிளில் வெற்றி பெறும். அதிகபட்சம் என்றால் 132 முதல் 134 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications