தமிழகத்துக்கு மட்டும் நிதி..மே.வங்கம் பிச்சையா கேட்குது? ராஜ்யசபாவில் மமதா கட்சி எம்.பி. ஆவேசம்
டெல்லி: தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி உதவி வழங்கும் மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்தை புறக்கணிப்பதாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொந்தளிப்புடன் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் தி.மு.கவின் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் தமிழக வெள்ள நிலைமையை குறித்து விவரித்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி, டெரிக் ஓ பிரையன், தமிழகமும் ஆந்திராவும் நிதி கேட்கும் போது நீங்கள் கொடுக்கிறீர்கள் பாராட்டுகிறோம்.

ஆனால் மேற்கு வங்கம் மாநிலத்தை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்..நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை என்று கொந்தளித்தார்.
முன்னதாக லோக்சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழக வெள்ள நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டது குறித்து விவரித்தார். மேற்கு வங்கத்துக்கு ரூ387 கோடி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதற்கு அக்கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேற்கு வங்க அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ6,000 கோடி; வறட்சி நிவாரண நிதியாக ரூ4,000 கோடி நாங்கள் கேட்டிருந்தோம்; ஆனால் நீங்கள் இவ்வளவுதான் கொடுத்துள்ளீர்கள் என்று கூற அனைத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்களும் புயலால் பாதிக்கப்பட்ட தங்களது மாநிலத்துக்கு ரூ280 கோடி மட்டும்தான் மத்திய அரசு கொடுத்ததாக அதிருப்தி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications