ரூ. 30 லட்சம் மோசடி... நிலுவையில் இரு வழக்குகள்.... கைதாகிறார் அமைச்சர் காமராஜ்?
ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் காமராஜ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
டெல்லி: ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் காமராஜ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
அமைச்சர் வீட்டில் ரெய்டு, மோசடி புகார், வருமான வரித்துறையினரை அமைச்சர்கள் மிரட்டியதாக புகார், தினகரன் கைது என்று அதிமுகவே அல்லோகலப்படுகிறது. அதிமுகவின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களும் எள்ளி நகையாடும் அளவுக்கு தமிழகத்தின் மானம் கப்பல் ஏறிவிட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டிடிவி தினகரன் ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பணம் விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்த வண்ணம் இருந்தன.

ஐடி ரெய்டு
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தியது. இதனால் தமிழகமே அதிர்ந்தது.

அமைச்சர்கள் கலாட்டா
அச்சமயம் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் வருமான வரித்துறையினரை பணிகளை செய்யவிடாமல் அமைச்சர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர். அதன்பேரில் 3 பேர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எடப்பாடிக்கு நெருக்கடி
இந்நிலையில் ஐடி ரெய்டுக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், ஐடி அதிகாரிகளை மிரட்டியது தொடர்பாக அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, ராதாகிருஷ்ணன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் எடப்பாடிக்கு மத்திய அரசு நெருக்கடி அளித்தது.

அமைச்சர் மீது வேறு புகார்
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் குமார் என்ற ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வீட்டை அபகரித்த ஒருவரை அங்கிருந்து விரட்டுவதற்காக ரூ.30 லட்சத்தை அமைச்சர் காமராஜுக்கு அவர் அளித்ததாகவும், வேலை முடியாத நிலையில் அவர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கைதாவாரா காமராஜ்
இந்நிலையில் வருமான வரித்துறையினரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. வழக்கப் பதிவு செய்யப்படவில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பர் என்று நீதிபதி ரமணா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை பொருத்தவரை செயல்படாத நிலையில் உள்ளதாலும், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட முதல்வரை அவர் எச்சரித்ததாலும் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதியாவிட்டால் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்யலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications