மோடியின் 'புதிய இந்தியா' கனவுக்கு ஜப்பான் துணை நிற்கும்: ஷின்ஷோ அபே பேச்சு
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று காலை நடந்த விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டினர்.
இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.
விழாவில் ஷின்ஷோ அபே பேசுகையில், இந்தியா, ஜப்பான் உறவில் இது ஒரு முக்கியமான நாள். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் உதவியாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்த முறை இந்தியா வரும்போது, இந்தியாவின் இயற்கை அழகை, புல்லட் ரயிலின் ஜன்னல் வழியாக பார்ப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். மோடிக்கு இந்தியா குறித்த நீண்ட கால திட்டங்கள் உள்ளன.
If we work together nothing is impossible: Japanese PM Shinzo Abe on India-Japan partnership #BulletTrain pic.twitter.com/C4EOulRqql
— ANI (@ANI) September 14, 2017
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கனவு மோடிக்கு உள்ளது. அந்த கனவுக்கு ஜப்பான் துணை நிற்க கோருகிறார். மோடியின் புதிய இந்தியா கனவுக்கு ஜப்பான் துணை நிற்கும்.
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஜப்பான் முழு உதவிகள் செய்யும். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட்டால் முடியாத விஷயம் எதுவுமே கிடையாது. ஜெய் ஜப்பான், ஜெய் இந்தியா என்பதே மோடிக்கும், எனக்குமான இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக நமஸ்கார் என்று பேச்சை ஆரம்பித்து, தன்யவாத் என்று உரையை நிறைவு செய்தார் ஷின்ஷோ அபே.